“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”
(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)
(‘பில்வம் வைத்தா”- என்று பெரியவாளால் அன்புடன் அழைக்கப்பட்டவரின் ஈமச் சடங்கிற்கு, பெரியவாளின் உதவி)

புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்று\ஸ்நானம் – பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனைவசப்பட்டிருக்கிறார். சிந்தனை கலைந்ததும் ஸ்ரீமடத்து மானேஜரை அழைத்து எங்கோ ஆயிரம் மைல் கடந்து உள்ள ஒரு சாமானிய பக்தருடைய முகவரியைத் தேடிப் பிடித்து எடுத்து வரச் செய்கிறார்.
ஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அதை உடனேஅந்த பக்தருக்குத் தந்தி மணி ஆர்டர் செய்யச் சொல்கிறார். அதற்கதிகமாக எந்த விவரமும் தரவில்லை.
ஒன்றும் புரியாமலே அவரது உத்தரவை மடத்துமேலாளர் நிறைவேற்றுகிறார்.
நாலைந்து நாளுக்குப் பின் அந்த பக்தரிடமிருந்து நன்றிக் கண்ணீராலேயே எழுதிய மடல் வருகிறது.
அன்று அவர் தமது தந்தையின் சடலத்தைப் போட்டுக் கொண்டு உத்தரகிரியைக்குப் பொருள் இல்லாமல் தவித்து உட்கார்ந்திருந்தாராம்.
ஸ்ரீசரணரின் சந்திரமௌளீச்வர பூஜைக்கு நீண்டகாலம் நிதமும் குடலை குடலையாக வில்வம் கொண்டு வந்து கொடுத்து, ‘பில்வம் வைத்தா’ என்றே அவரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அந்தத் தந்தை.
அப்பாவிடம் அன்பு சொரிந்த அப்பெரியவாளே கதி என்று த்ரௌபதி த்வாரகாவாஸனிடம் சரணாகதி செய்தது போல் அன்று அவரது புத்திரர் செய்தாராம்!


