மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை காலை 6 மணி முதல் வருகின்ற 12ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே மாதிரியாகவும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்
திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கோயில்கள், கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் சாமி தரிசனத்திற்காக திறக்க தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 5ம் தேதி முதல் காலை 6 மணி முதல் 12 30 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் கால பூஜை அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேற்கு மற்றும் வடக்கு நுழைவாயில் வழியே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், கோயிலுக்குள் தேங்காய், பழம் கொண்டு வர தடைவிதித்துள்ளது. அர்ச்சனை செய்வதற்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது