அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார். அந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் நகரில் நடுநாயகமாக வீற்றிருக்கும் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமியின் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 1,00,008 வடை மாலை சாத்தப்பட்டன.
காலை 11 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அஞ்சநேயர் காட்சியளித்தார். ஆஞ்சநேயருக்கு காலை 11 மணிக்கு மேல் பால் மற்றும் பல் வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆஞ்சநேயர்க்கு மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு இங்கு வருவது வழக்கம்.
அதனால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக குடி நீர், கழிப்பிட வசதியை நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறை சார்பில் மருத்துவ குழு தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கோவிலை சுற்றியும் பேருந்து நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இரண்டு டன் வண்ண மலர்களால் ஆஞ்சநேயர் சன்னதி அலங்கரிக்கப்பட்டன.