சிவன்மலை முருகன் கோயிலில் இளநீர் வைத்து பூஜை-ஆண்டவன் உத்தரவு..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

h.jpeg - 2026

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இளநீர் மற்றும் தென்னை துடைப்பம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்தப் பொருளை கோயில் மூலவர் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் வைத்து, பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக்  கூறப்படுகிறது. இதனால்தான், இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

கடைசியாக கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வேல் வைத்துப் பூஜை செய்யப்பட்டு, அந்தப் பொருள் புதன்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே மங்களப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்ற பக்தரின் கனவில் வந்ததாக, வியாழக்கிழமை இளநீர் மற்றும் தென்னை துடைப்பம் (விளக்குமாறு) வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வேல் நீக்கப்பட்டு, தற்போது இளநீர் மற்றும் துடைப்பம் பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Related articles

Recent articles

spot_img