
ஜெகந்நாதர் கோயிலுக்கு இன்று புரியிலிருந்து 2 கி.மீ. நடந்து சென்றார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது
ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக இன்று சென்றடைந்த குடியரசுத் தலைவர் திரெளெபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்த மாநிலத்துக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் திரௌபதி முர்முவை அரசியல்கட்சித் தலைவர்களும், மக்களும் திரளாக வந்து வரவேற்றனர்.
தனது ஒடிசா பயணத்தை, ஜெகந்நாதர் கோயிலில் சுவாமி தரிசனத்துடன் முர்மு தொடங்குகிறார். இதனை முன்னிட்டு, புரியிலிருந்து கோயிலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த திரௌபதி முர்மு, கோயிலுக்கு 2 கிலோ மீட்டர் முன்னதாகவே காரை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து இறங்கி, நடந்தே கோயிலுக்குச் சென்றார்.
வழியில், அவரைக் காண கூடியிருந்த மக்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டும், மாணவ, மாணவிகளுடன் பேசியபடியும் அவர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று கோயிலை அடைந்தார்.மத்திய இணையமைச்சர் தர்மேந்திர பிரதானும் குடியரசுத் தலைவருடன் கோயிலில் வழிபாடு நடத்தினார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னட்டு, புரி ஜெகந்நாதர் கோயில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.





