-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
1968 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கில் இந்தியா நியூசிலாந்திற்கு எதிரான தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் மேற்கு ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், மெக்ஸிகோ, கிழக்கு ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவற்றுக்கு எதிரான மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்றது, ஆனால் இந்தியா அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. இறுதியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிட்டியது. 1972ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
1976ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் செயற்கை புல் தள ஹாக்கி ஆடுகளம் அறிமுகப்படுத்தப்பட்டது, சாதாரண புல்தரை விளையாட்டுத் திடல்களில் ஆதிக்கம் செலுத்தியதைப் போலவே இந்தியா தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடியது. ஆனால் முதன்முறையாக வெறுங்கையுடன் வீடு திரும்பியது. 1980 ஒலிம்பிக் போட்டிகள் மாஸ்கோவில் நடைபெற்றன. இந்தியா தான்சானியாவை 18-0 என்ற கோல் கணக்கில் வென்றது, பின்னர் போலந்து மற்றும் ஸ்பெயினுடன் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது மற்றும் கியூபாவை 13-0 என்ற வித்தியாசத்தில் வென்றது மற்றும் சோவியத் யூனியனை 4-2 கோல் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினை 4–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா 8ஆவது முறையாக தங்கப்பதக்கம் வென்றது.
1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5ஆவது இடம்; 1988இல் சியோலில் 6ஆவது இடம்; 1992இல் ஸ்பெயின் பார்சிலோனாவில் 7ஆவது இடம்; 1996இல் அமெரிக்கவில் அட்லாண்டாவில் 8ஆவது இடம்; 2000ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சிட்னியில் 7ஆவது இடம்; 2004இல் கிரீஸ் ஏதென்ஸில் 7ஆவது இடம்; 2012இல் லண்டனில் 12ஆவது கடைசி இடம்; 2016இல் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் 8ஆவது இடம் என கடந்த 25 ஆண்டுகளாக பதக்கம் ஏதுமின்றி நமது ஹாக்கி அணி திரும்பி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெற்றிமேடையில் ஏறுவதை நாட்டின் இளைய தலைமுறை இம்முறை பார்க்கும் என நம்பப்படுகிறது. அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீடின் கீழ் தனது பயிற்சியை பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (எஸ்.ஏ.ஐ) மையத்தில் மேற்கொண்டு வருகிறது.
இந்திய அணி இந்த முறை ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவுடன் ‘ஏ’ பிரிவில் போட்டியிட உள்ளது. இந்தப்பிரிவில் உள்ள மற்ற அணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் மற்றும் ஒலிம்பிக்கை நடத்தும் ஜப்பான். ஜூலை 24ஆம் தேதி இந்திய அணி, தனது முதல் பந்தயத்தில் நியூசிலாந்தை சந்திக்கவேண்டும். கொரொனா பிரச்சனை காரணமாக இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடாமலேயே பயிற்சி பெற்றுவருகிறது. அதே நேரத்தில் நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை விளையாடிய பின்னர் அங்கு வரும். இந்த இரு அணிகளுமே இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில் உள்ளன. இது தவிர பிரிவில் உள்ள மற்றொரு அணியான , ஸ்பெயின், கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பில் விளையாடி பயிற்சி பெற்றுவருகிறது.
இதைப் போலவே நெதர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியும் கான்டினென்டல் சாம்பியன்ஷிப்பில் விளையாடி வருகின்றன. இந்த அணிகளுக்கு FIH ப்ரோ லீக் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் தயார்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியாவும் ப்ரோ லீக் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்தியாவின் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இது மட்டுமல்லாமல் இந்தியா தன்னைத் தயார்படுத்திக்கொள்ள சில சுற்றுப்பயணங்களையும் திட்டமிட்டிருந்தது, ஆனால் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இது நடக்கவில்லை.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியின் பொறுப்பாளருமான ஜாஃபர் இக்பால், எஃப் ஐ எச் புரோ லீக் போட்டிகள் ஒத்திவைப்பால் பெரிய வித்தியாசம் ஏற்படாது, ஏனெனில் இந்திய அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது என்று கூறுகிறார். இந்திய அணியின் பயிற்சி ஊழியர்கள், தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தலைமையில், தற்போது தொடர்ச்சியாக ஆறு பரஸ்பர போட்டிகள் தேர்வுச் சுற்றுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டிகளில் இந்திய அணி, இந்திய ஜெர்சியுடன் களம் இறங்குகிறது. ஒலிம்பிக் தொகுப்பில் உள்ள பிற அணிகள் போல எதிரணி தயார் செய்யப்பட்டு மைதானத்தில் இறக்கப்படுகிறது.
போட்டியில் ஒலிம்பிக் போன்ற சூழல் உருவாக்கப்பட்டு, போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. மேலும், இந்த போட்டியில் தங்களது திறமைகள் அனைத்தையும் வீரர்கள் காட்டினர். இதன் பின்னர் 16 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடரும்…