இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – முதல் நாள் – 22.12.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய -வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸ் 227 (மொமிநுல் ஹக் 84, முஷ்ஃபிகர் ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25, ஷண்டோ 24, உமேஷ் யாதவ் 4/25, அஷ்வின் 4/71) ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 8 ஓவருக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 3 ரன்னுடனும், சுப்மன் கில் 14 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா வங்கதேச அணிகள் ஆடும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடக்கிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ‘நஜ்முல் சாண்டோ’ விக்கெட்டை ஆரம்பித்திலேயே ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்தார். இந்திய அணியில் இவர் எதற்கு என்று கேள்வி கேட்டவர்களுக்கு, தனது பந்து வீச்சின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது. இதனால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஜெயதேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஆசிய பிட்சுகளில் இவர் பவுலிங்கை போலவே பேட்டிங் சிறப்பாக செய்வார். இதனால் இவருக்கு முன்னுரிமை கொடுக்க பட்டது. குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. சென்ற டெஸ்ட் ஆட்டத்தில் அவர் ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை தனது ஆப் ஸ்பின் பவுலிங்கால் திணறடிப்பது வழக்கம் தான். இதே போல, தான் வீசிய மூன்றாவது ஓவரிலேயே தொடக்க பேட்ஸ்மேன் ஷாண்டோவை LBW முறையில் ஆட்டம் இழக்க செய்தார். அதன் பின்னர், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், கலீத் அகமது ஆகியோரின் விக்கட்டுகளையும் அஷ்வின் எடுத்தார்.
73.5 ஓவர்கள ஆடிய வங்கதேச அணி 227 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
அதன் பின்னர் எட்டு ஓவர்கள் ஆடிய இந்திய அணி 19 ரன் எடுத்தது. வெளிச்சம் போதாமையால் ஆட்டம் ஒரு மணி நேரம் முன்னதாக நிறுத்தப்பட்டது.