
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் பாணியில் அதிரடி காட்டி விரைவான பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார் அபிஷேக் சர்மா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி கௌஹாத்தியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில்பந்துவீசத் தீர்மானித்து, நியூஸிலாந்தை பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக பும்ரா, ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதன்படி, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் கான்வே, 3வது பந்திலேயே ஆட்டமிழந்தார். 2வது ஓவரில் ரச்சின் ரவீந்திராவும் ஆட்டமிழக்க, 17 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் பிலிப்ஸ் (48), சாப்மேன் (32), சான்ட்னர் (27) ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ரன்களை சேர்த்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட்டானார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த தாக்கம் தெரியாத அளவில் அதிரடி காட்டினர் அபிஷேக் ஷர்மாவும், இஷான் கிஷானும்! இருவரும் சேர்ந்து3.2 ஓவர்களில் 53 ரன்களைச் சேர்ததனர். அதாவது முதல் 20 பந்தில் 53 ரன் சேர்ந்தது. அந்நிலையில் இஷான் கிஷான் (28) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டிகளில் ஆடியது போல் அதிரடி ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர் மழை பொழிந்ததால் ரன் ஜெட் வேகத்தில் எகிறியது.
அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்து குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து அபிஷேக் சர்மா சாதனையை நிகழ்த்தியது இந்திய ரசிகர்களை பெரிதும் உத்ஸாகத்தில் தள்ளியது.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் அடிக்க இந்திய அணி 10 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் 68 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 57 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் 20 பந்தில் 53 ரன்னும் அடுத்த 40 பந்தில் 102 ரன்னும் சேர்த்து இந்திய அணி சாதித்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்த போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.




