போடியை அடுத்துள்ள நாகலாபுரம் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கி அங்கு வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் ராகேஷ்குமார் ( 19) போடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாயார் உடல்நிலை சரியில்லாததால் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராகேஷ் குமார் தனது பாட்டி ராஜம்மாளுடன் நாகலாபுரத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் ராகேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போடி தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராகேஷ்குமார் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராகேஷ்குமார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர அவர் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை. இதனால் அவரால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியவில்லை.
பின்னர் போடியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. முதலாமாண்டு படித்து இருக்கிறார். என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை என ஏக்கத்துடன் இருந்து உள்ளார். இந்த மன வருத்தம் காரணமாக ராகேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இவ்வாறு தகவல்கள் வெளியாகின.