கள்ளக்குறிச்சி எஸ் ஓகையூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கருப்பாயி. இவர்களுக்கு அன்பு என்ற மகள் உள்ளார்.
அவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவருடன் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஒரு வாரத்திலேயே ஜெகதீசன் சிங்கப்பூர் சென்று விட்ட நிலையில் அன்பு தனது தாய் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அன்பு வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அன்புவுடன் பள்ளியில் படிக்கும் அவரது பக்கத்து வீட்டு பெண், தீனா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த பெண் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அன்பு அவர்களது காதலுக்கு உதவ முன் வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்பு தனது மற்ற தோழிகளை அழைத்துக் கொண்டு வெள்ளிமலை கோவிலில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார்.
திருமணமான ஜோடிகள் தலைமறைவாகிய நிலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அன்புவின் பக்கத்து வீட்டு தோழியின் தந்தை அன்புவிடம் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து அவரது மகளும், அன்பும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டது தெரியவந்தது. தோழியின் தந்தை கேசவன் எனது மகள் உன்னுடன் தான் வந்துள்ளார். அவளைக் காணவில்லை.
காவல்நிலையத்தில் புகார் செய்யப் போகிறேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு அச்சமடைந்த அன்பு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்ததுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.