கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச்சென்று 6 நாட்கள் அடைத்து 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
16 வயதான அந்த மாணவியை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். எனினும் மாணவியின் இருப்பிடம் குறித்து கண்டறியமுடியாததால் காவல்துறையினர் திணறினர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவனது பிடியில் மாணவி இருப்பதை உறுதி செய்தனர்.
அதன்படி, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்ட காவல்துறை, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, கடந்த 6 நாட்களாக அந்த மாணவி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அந்த சிறுவனை ஒப்படைத்தனர்.