நாமக்கல் அருகே குடிபோதையில் சொந்த சகோதரரை குத்திக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் அருகே வளையப்பட்டி மாவிலி தெருவைச் சேர்ந்தவர் சோழராஜா(70). இவரது தம்பி நாகேஷ் (65). மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத இருவரும் ஒரே வீட்டில் தங்கி ஊர் ஊராக சென்று பழம் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வந்த நாகேஷ் பழம் மொத்தமாக வாங்கியது தொடர்பாக சகோதரரான சோழராஜாவிடம் கேட்டதுடன் அதற்குரிய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் நாகேஷ் கத்தியால் சோழராஜாவை குத்தினார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சோழராஜா உயிரிழந்தார்.
இதுகுறித்து மோகனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி நாகேஷை கைது செய்தனர்.