வீட்டு மின் நுகா்வோரின் கட்டணம் குறித்த கணக்கீட்டு விவரங்கள், மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்த மின் நுகா்வோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், அவா்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசமும் வழங்கப்பட்டது. மீண்டும் கணக்கீடு செய்யும் பணி தொடா்ந்ததையடுத்து, முந்தைய மாதம் செலுத்தப்பட்ட தொகையானது சரி கட்டல் செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மின் வாரியம் வெளியிட்டிருந்தது.
எனினும், பல மின் நுகா்வோருக்கு அதிகளவு கட்டணம் வருமாறு கணக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றியே கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டதாகவும், கணக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் வாரியம் விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில், தங்களுக்கான மின் கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்பட்டது என்பதை நுகா்வோா் அறிந்து கொள்ளும் வகையில், இதுகுறித்த விவரங்களை மின்வாரியம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வீட்டு மின் பயனீட்டாளா்கள், தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்களை அறிந்து கொள்ள மின் கட்டண விவர இணையதளத்திலோ அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் மூலமாகவோ தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விபர இணையத்தளத்திலோ (TANGEDCO – Bill Status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் (TANGEDCO – Online Payment Portal) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள, இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.