ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை உயர்வு கண்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓரம்பம், போச்சம்பள்ளி, மற்றும் குந்தாரப்பள்ளி ஆகிய சந்தைகளில் சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது.
இந்த ஆட்டுச் சந்தையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை, விவசாயிகள் விற்பனை செய்வதற்காக கொண்டுவந்து, குழுக்களாக ஒன்று சேர்ந்து விற்பனை செய்தனர்.
குறிப்பாக ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் பெங்களுர் மற்றும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, வேலூர், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருத்து வந்திருந்த வியாபாரிகள், போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆடுகளும் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து கறி நாளில், உற்றார் உறவினர்களுக்கு கறி விருந்து வழங்குவது வழக்கம். அதற்காக ஆடுகள் வாங்க வந்தோம், கடந்த வாரத்தை விட இத்த வாரம் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் குறிப்பிட்டனர்!