ராஜபட்ச தலைமையிலான முந்தைய ஆட்சியில் இலங்கை பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அவரது தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபட்சவை போலீசார் தேடி வருகின்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபட்சவும், அவரது தம்பிகளும் பதவியை பயன்படுத்தி செய்த குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. மேலும், அவர் குடும்பத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. எனவே, அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படுவர் என்று கூறப்பட்டது. இதனால், ராஜபட்சயின் தம்பிகள் கோத்தபய, மற்றும் பசில் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். பசில் ராஜபட்ச கடந்த 11ஆம் தேதி தனது மனைவியுடன் அமெரிக்கா சென்று விட்டார். பின்னர் முதல் வேலையாக, சுதந்திரா கட்சி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். இதையடுத்து, பசில் ராஜபட்ச சட்ட விரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையதாக தலைமை ஆலோசகராக இருந்த பசில் ராஜபட்ச மீது ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க பசில் ராஜபட்சவை இலங்கை போலீசார் தேடிவருவதாக அந்நாட்டின் போலீஸ் உதவி சூப்பிரண்ட் ருவான் குணசேகரா கூறியுள்ளார். இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற பசில், தற்போது அமெரிக்காவில் இல்லை என்றும், வியட்நாமுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஊழல் வழக்கில் ராஜபட்சவின் தம்பியைத் தேடுகிறது போலீஸ்: அமெரிக்காவிலிருந்தும் தப்பிவிட்டாராம்!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

