
விமானப் பணிப்பெண்ணை முகத்தில் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று விமானப் பணியாளர்கள் அறிவிப்பு செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் விமானம் பறக்கத் தொடங்கியது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோது, பணிப்பெண் ஒருவர் பிசினஸ் கிளாசில் பயணித்த ஒருவரைப் பார்த்தார். அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால், அவரிடம் அணியுமாறு புன்னகையுடன் பணிவோடு சொன்னார்.
ஆனால், அந்தப் பயணி படாரென்று அவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் சுதாரிப்பதற்குள் அடுத்தும் ஒரு குத்துவிட்டார். இதில் விமானப் பணிப்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
அவர் அங்கிருந்து வெளியேற, அக்கம் பக்கத்து பயணிகள் அவரை அப்படியே பிடித்துக் கொண்டனர். பின்னர் டேப்பால் அவர் கைகளை இருக்கையில் கட்டினர். இதுபற்றி விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக டென்வர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. விமானம் நின்றதும் அந்த வன்முறை பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மெக்கன்ஸி ரோஸ் என்ற பயணி கூறும்போது, அந்த பயணி இரண்டு முறை அவர் முகத்தில் குத்தியதாக உணர்கிறேன்.
இதனால் அவர் அணிந்திருந்த முகக் கவசத்தின் வெளியே ரத்தம் கசிந்திருந்ததைப் பார்த்தேன். ஆண்கள் பெண்களை அடிப்பது அபத்தமானது மற்றும் கேலிக்கூத்தானது என்று தெரிவித்துள்ளார்.