ஜெனீவா:
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவு செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. அறிக்கையில் வீடியோ ஆதாரங்களுடன்
குறிப்பிடப்பட்டது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதுகுறித்து இலங்கையில் பலமான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த அறிக்கை குறித்து ஆராய சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது அரசு.
அந்த அறிக்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் என இரு தரப்பினருமே ஈடுபட்டு உள்ளனர் என்றும், இது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்து படுகொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் இசைப்பிரியா பற்றி கூறப்பட்டிருப்பதாவது:-
சோபனா தர்மராஜா என்கிற இசைப்பிரியாவை 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந்தேதி வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக் கடல் பகுதியில் இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்துள்ளது. இதை பலரும் நேரில் பார்த்து இருக்கின்றனர். இது தொடர்பாக ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பதை ஒரு வீடியோ காட்சி உறுதிப்படுத்துகிறது. அப்போது இலங்கை ராணுவத்தினர் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றை கொடுத்ததும் அதில் இடம் பெற்று உள்ளது. மேலாடை போர்த்திய நிலையில் இளம் பெண் அருகே இசைப்பிரியா உட்கார வைக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
அதேபோல் இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் வீடியோ, புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் அவருடைய உடல் உறுப்புகள் வெளியே தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை தடயவியல் துறையினர் ஆராய்ந்தபோது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது – என்று அதில் கூறப்பட்டுள்ளது.


