ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவினை வெளியிட்ட இலங்கை வவுனியாவைச் சேர்ந்த மௌல்வியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை, வவுனியா- செட்டிகுளத்தை அடுத்த முதலியார் குளத்தைச் சேர்ந்தவர் முனாஜிப் மௌல்வி. இவர், சௌதிஅரேபியாவிலிருந்து விமானம் மூலமாக இலங்கைக்கு வந்தார்.
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நேற்று அவர் வந்த போது, அவரை இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
முனாஜிப் மௌல்வி கடந்த மாதம் ஏப். 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ பதிவாக கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் காணொளி இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் இஸ்லமிய பயங்கரவாதிகளைக் குறிவைத்து போலீஸார் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், ஐஎஸ்.,ஸுக்கு ஆதரவாக மௌல்வி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அந்த வீடியோ பதிவினை ஆதாரமாகக் கொண்டு, மௌல்வியை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளதாகக் கூறியிருந்தனர்.


