
ஆத்தூர் அருகே, பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தந்தை-மகள் பரிதாப பலி; 2 பேர் படுகாயம்.
சென்னை மேற்கு அண்ணாநகர் முகப்பேர் மோகன் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 50). இவர் துபாயில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சென்னை வந்தார். இவர் நேற்று காலை தனக்கு சொந்தமான காரில் இவரது மனைவி கவிதா (42), மகள்கள் தர்ஷினி (19), தீக்ஷா (13) ஆகியோருடன் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள கவிதாவின் தம்பி ரமேஷ்பாபு வீட்டிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார்.
இவர்களது கார் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி புறவழிச் சாலையில் வசிஷ்டநதி மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உன்ன தடுப்புச் சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கி, தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனையடுத்து . உடனடியாக அக்கம், பக்கத்தினர் காரில் பரவிய தீயை அணைத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த 4 பேரையும் மீட்க முயன்றனர்.
ஆனால் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த மற்றவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தர்ஷினி வழியிலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கவிதா மற்றும் தீக்ஷா இருவரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.
இதில் தீக்ஷா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


