13 வயது சிறுவனுடன் காதல் ஏற்பட்டு, 14 வயதில் தாய் ஆன நேபாள சிறுமியின் திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் குழந்தையை பராமரிக்க அரசு உதவுவதாகக் கூறியுள்ளது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் நவீன யுகத்தில் காதலுக்கு வயதும் இல்லை என்று ஆகியிருக்கிறது.
நேபாளத்தின் ரூபிவேலி பகுதியைச் சேர்ந்த சிறுமி பபித்ரா தாமங். 14 வயதான சிறுமிக்கு அதே பள்ளியில் 5வது கிரேட் படிக்கும் ரமேஷ் தாமங் என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் நெருக்கமானார்கள். இதில் பபித்ரா கரு தரித்தார். பதறிப்போன பெற்றோர் பபித்ராவின் வயது கருதி எதுவும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்தனர்.
ரமேஷ் தாமங்கை விட்டு விலக பபித்ரா தயாராக இல்லாத நிலையில் அண்மையில் பபித்ராவிற்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இதை அடுத்து மைனர் தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட நிர்வாகத்திடம் தஞ்சம் புகுந்தனர்.
இருவருமே மைனர் என்பதால் இந்தக் காதலை சட்டப்படி அங்கீகரிக்க முடியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியது. அதே நேரம் குழந்தையைப் பராமரிக்க உதவி செய்வதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தாமங் சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு திருமண வயதை அடைந்த உடன் மணம் முடித்து வைக்கப்படும் என்று ரமேஷ் சமூகத்தினர் கூறியுள்ளனர். அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் இருக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.



