அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்82காசுகள் அளவுக்கு சரிந்தது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. துருக்கி நாணய மதிப்பு சரிவு உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் தாக்கம் காரணமாகவே, ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
2018ஆம் ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாத இறுதி என்பதால், இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்ததால், அதற்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை வர்த்தகத்தின்போது, ரூபாயின் மதிப்பு மேலும் 23 காசுகள் அளவுக்கு குறைந்து 70ரூபாய்82 காசுகளாக இருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவால், இறக்குமதிகள், வெளிநாட்டு கல்வி மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இந்தியா இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் ரூபாய் மதிப்பின் சரிவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, அரசு மற்றும் நுகர்வோர் இருதரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.




