நடிகை அனுஷ்கா ஷெட்டி பற்றி அடுத்த பரபரப்பு கிளம்பி இருக்கிறது. அவர் பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. அவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் மறுத்து வருகின்றனர்.
நாங்கள் நண்பர்கள்தான், எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகச் செய்திகள் வந்தன. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றி பேச்சு எழவில்லை. இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்பட்டது.
அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், இதை அனுஷ்கா மறுத்துள்ளார். என்னை இன்னும் எத்தனை பேரோடு இணைத்துப் பேசப்போகிறார்களோ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் பிரகாஷ் கோவலமுடியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே.ராகவேந்திர ராவின் மகன். தமிழில், ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்கியவர். இந்தியில் ஜட்ஜ்மென்டல் ஹே கியா என்ற படத்தை இயக்கியுள்ளார். இது பற்றிய செய்தி தெலுங்கு சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.