விக்ரம் – நயன்தாரா நடிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கி வரும் “இருமுகன்” படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக மலேஷியா சென்ற நயன்தாரா திரும்பி வரும்போது விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட விவரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போதைப்பொருள் வைத்திருந்ததாக நடிகை நயன்தாராவின் பெயர் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டு வந்தது.
இதுகுறித்து இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது.
அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், நயன்தாராவின் பாஸ்போட் நகல் அந்நாட்டு இணையதளங்களில் வெளியானது குறித்து, மலேஷியா காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.


