சென்னை உயர் நீதிமன்றத்தில்,வழக்குரைஞர்கள் சுதாராமலிங்கம், அன்னா மேத்யூ உள்பட 6 பெண் வழக்குரைஞர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், நீதித்துறையை பற்றியும், பெண் வழக்குரைஞர்களை பற்றியும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வாட்ஸ்ஆப்,முகனூல், யூடியூப், உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வழக்குரைஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிடவேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியம், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘நீதித்துறை பற்றியும், நீதித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களை பற்றியும், குறிப்பாக பெண் வழக்குரைஞர்களை பற்றியும் வாட்ஸ்ஆப், முகனூல், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட வழக்குரைஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு தடை விதிக்கப்படுகிறது.
இவர்கள் முகனூல், உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட்ட ஆட்சேபனை கருத்துக்களை அகற்ற முகநூல், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக அந்நிறுவனங்களுக்கு சென்னை சைபர் கிரைம் துணை காவல் ஆணையாளர் உதவிகளை செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


