நாட்டறம்பள்ளி கல்லூரியில் மர்மப் பொருள் வெடித்த விபத்தில் ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

Published:

திருப்பத்தூர் அருகே, நாட்டறம்பள்ளியில் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்த மர்ம பொருள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் கல்லூரி பஸ்சின் டிரைவர் உடல் கருகி பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். மர்மப் பொருள் விழுந்த இடத்தில் 5 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ‘டோல்கேட்’ பகுதியில் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 11 மணியளவில் வானத்திலிருந்து பறந்து வந்த ஒரு மர்மப் பொருள் பிரதான கட்டடத்துக்கு எதிரே உள்ள தோட்டப் பகுதியில் விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் பெரும் புகை மண்டலம் ஏற்பட்டது. இந்த வெடிச்சத்தம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது. மாணவ, மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியபோது அருகே நின்றிருந்த கல்லூரி பஸ்சின் டிரைவர் கே.பந்தாரப்பள்ளியை சேர்ந்த காமராஜ் (வயது 40) என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடினார். தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த பணியாளர்கள் முரளி (30), சந்தோஷ் (40), சசிகுமார் (45) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

படுகாயமடைந்தவர்களை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டார். மற்ற 3 பேரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் கல்லூரியில் சில அறைகளின் கண்ணாடிகள் நொறுங்கின. வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த 5 பஸ்களின் கண்ணாடிகளும் நொறுங்கின.

வெடிபொருள் விழுந்த இடத்தை நாட்டறம்பள்ளி தாசில்தார் செல்வராஜ் பார்வையிட்டபோது பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அதில் இருந்து புகையும் வெளிவந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு மர்மப் பொருளைச் சுற்றி வேலியிட்டு யாரும் நெருங்கிவிடாமல் தடுப்புகளை ஏற்படுத்தினர்.

மர்மப் பொருள் குறித்து வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளுக்கும், வெடிபொருள் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி தலைவர் செல்வமும் அந்த இடத்தை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

Related articles

Recent articles

spot_img