ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோவில் திருவிழாவின் போது போலீசாரை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு போலீசார் கண்ணன் (35) அங்கு சென்றிருந்தார். மண்
நேற்று இரவு அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா (26), அருண்குமார் (26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர்.இதை பார்த்த போலீசார் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் போதையில் இருந்த 2 பேரும் அதனை கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பேசி போலீசார் கண்ணனை தாக்கி உள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதிராஜா, அருண் குமாரை கைது செய்தனர்.






