விருதுநகர் மாவட்டம் மங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மாணவர்களை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரவழைக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களைச் சுற்றுலா அழைத்து செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேரையும், 4 ஆசிரியர்களையும் தனது சொந்த செலவில் சென்னைக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா அழைத்து வந்த தலைமை ஆசிரியர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர்.
இதே போல மற்ற வகுப்பு மாணவர்களும் லீவு எடுக்காமல் பள்ளி வரும் பட்சத்தில் அவர்களையும் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்வதாக அவர் அறிவித்துள்ளார். மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கத் தலைமை ஆசிரியர் எடுத்துள்ள இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.