ஜூன் 15-ந் தேதி 10ம் வகுப்புத் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் உறுதி படத் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 2-வது வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 2.30-க்கு தெரிவிக்கும்படி அரசு தலைமை வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பொது முடக்கக் காலத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் நலனில் தமிழக அரசு எவ்வாறு ரிஸ்க் எடுக்கிறது. 9 லட்சம் மாணவர்கள் வாழ்க்கை தொடர்பான விஷயம் இது. பொது முடக்கக் காலத்திலேயே பொதுத் தேர்வை நடத்த வேண்டியதற்கு அவசியம் உள்ளது என நினைக்கிறீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசின் தெரிவித்திருக்கும் நிலையில், அதனை மீறி, ஜூன் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்தப்படுவது ஏன்? கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கக் காலத்தில் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை தமிழக அரசே மீறலாமா?
லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஜூலை 2-வது வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தலாமா என்பது குறித்து இன்று பிற்பகல் 2.30-க்கு தெரிவிக்கும்படி அரசு தலைமை வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.