தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கருத்தில் கொண்டு கல்லூரிகள் இணைய வழி மூலமாக மட்டுமே பாடம் எடுக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி வாரத்தில் ஆறு நாட்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல பருவத் தேர்வுகளும் இணையத்தின் வழியாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருடன் நடத்திய ஆலோசனையில், அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்விக்கூடங்களின் இயக்குநர்கள் சொன்ன பரிந்துரைகளின் அடிப்படிடையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை ஏற்று இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ஆன்லைனில் மட்டுமே நடத்திட கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு செயல்முறை வகுப்புகள் மற்றும் அது சார்ந்த தேர்வுகளை வரும் 31ஆம் தேதிக்குள் முடித்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது.
இது உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை கல்லூரிகளுக்கும் பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இன்று முதல் அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.