தமிழகத்தல், நீட் தேர்வு நடந்து இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு அடைந்தது. இந் நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் சரியான வகையில் வசதிகளைச் செய்து தரவில்லை என்று பெற்றோர் குறைபட்டுக் கொண்டனர்.
முன்னதாக, நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது, தேசிய தேர்வு முகமை. நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், முழுக்கை சட்டை அணியக் கூடாது என கூறியிருந்தும், முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களது சட்டை கைப்பகுதிகள், கத்திரிக்கோலால் வெட்டப்பட்டு, அரைக்கை சட்டையாக மாற்றப்பட்டு மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் காது தோடு, ஜிமிக்கி, கால் கொலுசு என அணிந்து வந்தவர்களின் அலங்காரப் பொருள்கள் கழற்றப் பட்டன. சில இடங்களில் துப்பட்டாவும் அகற்றப் பட்டுள்ளன.
முன்பு போல் அல்லாமல், இந்த வருடம் போதிய விழிப்புணர்வு பெற்றோர்க்கு அளிக்கப் பட்டதால், தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே சென்று மாணவர்கள் சற்று நிம்மதியாக தேர்வு எழுதினர்.
இருப்பினும், கடும் வெயில் நேரம் என்பதால், தேர்வர்களுடன் வந்த பெற்றோர்கள் பல சிரமங்களைச் சந்தித்தனர். பல்வேறு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மைய வளாகங்களில் காத்திருப்பதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை; பல இடங்களில், குறைந்தபட்சம் குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை என்று பெற்றோர் குறை கூறினர்.
வரும் ஆண்டுகளில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப் பட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.