
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், பாஜக., 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதை அடுத்து, பாஜக., ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்எம்ஏ.,க்கள் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியை சட்டசபைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதை அடுத்து பா.ஜ., சார்பில் ஆட்சி செய்யும் மேற்கு வங்க முதல் முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.
55 வயதாகும் சுவேந்து அதிகாரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன். வங்காள பிராமணர் வகுப்பைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, அவ்வகையில் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் வந்தவர். தொடக்க காலத்தில் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணமுல் காங்கிரஸில் நடைபெறும் தில்லுமுல்லுகள், தேசியச் சூழலுக்கு எதிராக மம்தா நடந்து கொள்வது போன்றவற்றால் அதில் இருந்து வெளியேறி, 2020 டிசம்பரில் பாஜக.,வில் இணைந்தார். கடந்த 2021 தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராகப் போட்டியிட்டு, அவரைத் தோற்கடித்து தேசிய அரசியலில் கவனம் பெற்றார்.
தற்போதைய 2026 தேர்தலில், தனது சொந்த தொகுதியான பவானிபூரிலேயே மம்தாவைத் தோற்கடித்துள்ளார் சுவேந்து அதிகாரி. மம்தா இங்கே தோற்றது திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக., மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதியது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பாஜக., தலைமை அலுவலகத்தில், புதிதாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சுவேந்து அதிகாரி, பாஜக., சட்டசபைக் குழு தலைவராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின், லோக்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருக்கு, ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். இந்நிலையில் கோல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரிகேட் மைதானத்தில் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில், மேற்கு வங்கத்தின் ஒன்பதாவது முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து, பாஜக., மாநில முன்னாள் தலைவர் திலீப் கோஷ் அமைச்சராக பதவியேற்றார். அக்னி மித்ரா பால், அசோக் கிர்தானியா, சுதிராம் துடு, நிசித் பிரமாணிக் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும், அன்றைய தினமே முதல் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின. அமைச்சர்களுக்கான துறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக.,வின் வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு, விழா மேடையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நன்றி தெரிவித்தார். பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, பாஜக., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, மக்களின் தீர்ப்பிற்கு தலைவணங்கும் விதமாக மேடையில் மண்டியிட்டு வணங்கியபோது, பொதுமக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர்.
மேடையில் 90 வயது பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காருக்கு மரியாதை செய்த பிரதமர் மோதி:
பிரதமர் நரேந்திர மோதி, பிரிகேட் பரேட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் 90 வயதான மூத்த பாஜக தொண்டர் மக்கன்லால் சர்க்காரின் கால்களைத் தொட்டு வணங்கி நாட்டுக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். அவர் மக்கன்லால் சர்க்காரை அணைத்து, அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பை உணர்வுப் பூர்வமாகக் கௌரவித்தார்.
மக்கன்லால் சர்க்கார் தனது வாழ்நாள் முழுவதும் பாஜகவுக்காகப் பாடுபட்டு வந்தவர். அவர் தடியடிகளையும், சிறை வாசத்தையும், மம்தா பானர்ஜியின் குண்டர்களின் பயங்கரவாதத்தையும் சகித்துக்கொண்டார். ஆனாலும் அவர் ஒருபோதும் தலைகுனியவில்லை.
அதிகார போதையில் மூழ்காமல், ஒரு தொண்டரின் கால்களைத் தொடும் தலைவர் இவர். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும் தொண்டர்களைத் தொடர்ந்து நசுக்கி, அடித்து, அச்சுறுத்தி வரும் வேளையில் இது போன்ற செயல்கள் தொண்டர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. பாஜகவில் தொண்டரே உண்மையான ராஜா என்ற செய்தியை இது வெளிப்படுத்துகிறது. கட்சிக்காக இரவும் பகலும் அனைத்தை யும் தியாகம் செய்பவர்களை மோதியும் பாஜகவும் ஒருபோதும் மறப்பதில்லை. உண்மையான அரசியல் என்பது சேவை யையும் மரியாதையையும் பற்றியது என்பதை மோதி நிரூபித்து வருகிறார்.
மக்கன்லால் சர்க்கார் போன்ற கோடிக் கணக்கான தொண்டர்களின் தியாகங்க ளால்தான் இன்று வங்காளத்தில் தாமரை மலர்ந்துள்ளது.




