தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை: தடுப்பது எப்படி?

Published:

school 000713 - 2026

தமிழ்நாட்டில் 2018-19 ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே கல்விக் கட்டணக் கொள்ளை தொடங்கி விட்டது. எந்த விதிகளுக்கும் உட்படாமல் சில பள்ளிகளில் ஆண்டுக் கல்விக்கட்டணம் ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கல்விக்கட்டண கொள்ளையால் ஏழைகள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு பள்ளிகளின் சுரண்டலுக்கு துணை போகிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும்  பள்ளிகளில் புதிய கல்வியாண்டு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், கண்மூடித்தனமாக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மாநிலப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் இப்போது தான் முந்தைய கல்வியாண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதற்குள்ளாகவே அடுத்தக் கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணக்கொள்ளை தொடங்கி விட்டது. ரூ.5000 முதல் ரூ.40,000 வரை கல்விக் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கூட வெளியிடாமல், பெற்றோரை மிரட்டி, கட்டணங்களை எந்தக் கணக்கிலும் வராமல் வசூலிக்கும் பணியில் பள்ளிகள் ஈடுபட்டிருக்கின்றன.

கிராமப்புறங்களில் உள்ள சாதாரண பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளை ஓரளவு குறைவாக உள்ள நிலையில், நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெயர் பெற்ற பள்ளிகளில் தான் கட்டணக் கொள்ளை மிக அதிகமாக உள்ளது.  சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கு ரூ.40,000 முதல் ரூ.60000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு கட்டணத்துடன் ஒப்பிடும்போது ரூ.10,000 வரை அதிகம்.

மேல்நிலை வகுப்புகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டண விகிதங்களின்படி தமிழகத்தில் உள்ள வெகுசில பள்ளிகளுக்கு மட்டும் தான் ரூ.50,000 அளவுக்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் அதைவிட 3 மடங்கு அளவுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

anbu mani 1 - 2026

தனியார் பள்ளிகள் அரசுக்குத் தெரியாமல் கட்டணக் கொள்ளையை நடத்தவில்லை. ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்புடன் தான் கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுகின்றன. தமிழக அரசே கட்டணக் கொள்ளைக்கு  வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை ஆகும். தமிழகத்தில் சுமார் 10,000 தனியார் பள்ளிகள் உள்ள நிலையில், எந்த ஒரு பள்ளிக்கும் முறைப்படியாக  கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்றாண்டுக்கு ஒரு முறை புதியக் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளுக்கு கடைசியாக 2014-ஆம் ஆண்டில் தான் கல்விக்கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அவை 2016-17ஆம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன.  சில பள்ளிகளுக்கு மட்டும் 2017-18 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு  ஓய்வு பெற்று விட்ட நிலையில் அவருக்குப் பதிலாக புதிய தலைவரை உடனடியாக நியமித்து, அடுத்து வரும் ஆண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் திட்டமிட்டே கட்டண நிர்ணயக்குழுவின் தலைவர் பதவிக்கு நீதிபதி மாசிலாமணியை ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் நியமித்தனர். ஆனால், புதிய தலைவர் பொறுப்பேற்று ஓராண்டாகி விட்ட நிலையில் இதுவரை ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்கவில்லை.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதனால் தமிழகத்தில் எந்தப் பள்ளிக்கும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமின்றி கல்விக்கட்டணக் குழு கடந்த 3 ஆண்டுகளாகவே செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் தனியார் பள்ளிகள் வசூலிப்பது தான் கட்டணம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டணக் கொள்ளை உச்சத்தை அடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, புதிய கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்துவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தும் நிலை உள்ளது. முழுக் கட்டணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது; பருவ வாரியாகவோ, மாத வாரியாகவோ கட்டணத்தை வசூலிக்கலாம் என்று விதிகளில் கூறப்பட்டிருக்கும் போதிலும் அதை எந்த தனியார் பள்ளிகளும் பின்பற்றுவதில்லை.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. ஆனால், மணல் கொள்ளைக்கு அடுத்தப்படியாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம் தான் ஆட்சியாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால், அவர்கள் கட்டணக் கொள்ளையின் பங்குதாரர்களாக மாறி விடுகின்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட இரு வழிகள் தான் உள்ளன.

முதலாவது கல்வியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்குவது. அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தலாம் என்பதுதான் பா.ம.க.வின் கொள்கை.

இரண்டாவது ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை அதற்காக கல்வித்துறையால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கில் மாணவர்களை செலுத்த வைத்து, அதை பள்ளிகளின் கணக்குக்கு மாற்றுவது. இதன்மூலம் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் மிரட்டிக் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த இரண்டில் ஒரு முறையை நடப்பாண்டிலிருந்து பின்பற்றி கல்விக்கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும்.

– மருத்துவர் அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி, இளைஞரணித் தலைவர்

Related articles

Recent articles

spot_img