இன்று இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் களப்பலி ஆன் “மங்கள்பாண்டே”என்ற பிராமண இளைஞன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று ஏப் 8…
இது முதல் சுதந்திரப் போராட்டம் … சிப்பாய் கலகம் அல்ல…. சுதந்திரப் போராட்டம்!
பசுவின் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவையாக தோட்டாக்கள் மற்றும் ராணுவ வீர்ர்கள் மத அடையாளங்கள் உபயோகப்படுத்த தடை போன்றவை சிப்பாய்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த சிப்பாய்கள் கிளர்ச்சி பிரிட்டிஷ் ஆட்சியை நிலைக்குலையச் செய்தது. வானுள்ளவரை, கடல் நீருள்ளவரை பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியம் நிலைத்திருக்கும் என்ற அவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டது சிப்பாய் புரட்சியாகும்.
1857ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதியன்று மீரட் சிறையில் அடைக்கப்பட்ட தங்களது சகாக்களை விடுவித்த சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளை வெட்டிக் கொன்றனர். மீரட்டில் இருந்து டெல்லியை நோக்கி படை புறப்பட்டது… ஆட்சியைக் கைப்பற்ற….
இந்த புரட்சிக்கு வித்திட்டது இளம் “பிராமண சிப்பாய்” மங்கள் பாண்டேயின் வீரமாகும்…
இந்தியாவின் வடக்குப் பிரதேசங்களிலும் குறிப்பாக பாரக்பூரிலும் சிப்பாய்கள் மத்தியில் கொதிநிலை அதிகரித்து வருவதை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர்..அப்படி ஏதேனும் இவர்கள் அசம்பாவித சம்பவத்துக்குத் தயாராகிவிட்டால், அவர்களை அடக்குவதற்கென்று கல்கத்தாவிலிருந்தும், பர்மாவிலிருந்தும் ஏராளமான படைகளைக் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். தங்களைப் பாதுகாக்க வெளியிலிருந்து படைகள் வந்துவிட்ட பின் துணிந்து 19ஆம் பிரிவு சிப்பாய்களிடமிருந்த துப்பாக்கிகளையும் மற்ற ஆயுதங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை நிராயுதபாணிகளாக ஆக்கிவைத்தனர்.
1857ஆம் வருஷம் மார்ச் மாதம் 29ஆம் தேதி. தன்னுடைய படைப்பிரிவில் நடந்து கொண்டிருந்த வைகளைப் பார்த்து கொதித்துப் போன மங்கள் பாண்டே, தன்னுடைய துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்ளுவதற்கு முன்பாகத் தான் ஏதேனும் செய்துவிட வேண்டுமென்கிற வெறியோடு, தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டு வேகமாக ராணுவ அணிவகுப்பு மைதானத்துக்குள் நுழைந்தார்.
அங்கு அணிவகுத்து நின்றிருந்த இந்திய சிப்பாய்களை நோக்கி அவர் “சகோதர வீரர்களே! நம்மையும், நம் மத உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! இந்து கடவுளர் மீதும், அல்லாவின் மீதும் ஆணையிட்டு அழைக்கிறேன், சகோதரர்களே நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களைப் போல நடத்தும் இந்த அந்நியர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னப் படுத்துங்கள். இவர்களைத் துரத்திவிட்டு நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்திடுவோம். செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவினார்.
அப்போது அந்த படைவீரர்களின் அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தவன் சார்ஜெண்ட் மேஜர் ஹ்யூசன் என்பான். மங்கள் பாண்டே திடுதிப்பென்று மைதானத்துக்குள் வந்து தூண்டிவிடுவதைக் கண்ட மேஜர் மங்கள் பாண்டேயைக் கைது செய்யும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் படைத் தளபதி ஹ்யூசனின் ஆணையை ஏற்று பாண்டேயைக் கைது செய்ய எவரும் முன்வரவில்லை.
சிறிது அமைதி நிலவியது. தன் ஆணை ஏற்கப்படவில்லை என்பதை உணர்ந்த மேஜர் ஹ்யூசன் கோபத்தில் கொதித்துப் போனான். என்ன செய்வதென்று புரியாத நிலையில் மங்கள் பாண்டேயின் துப்பாக்கி வேட்டுச் சத்தம் எழுந்தது. அதிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் ஹ்யூசன் உடலில் பாய்ந்து அவனது உயிரைக் குடித்துவிட்டது.
இவற்றையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு ஆங்கில தளபதி லெஃப்டினென்ட் பாக் என்பான் தன்னுடைய குதிரையைத் தட்டிவிட்டு மிக வேகமாக பாண்டேயை நெருங்கி வந்தான். தன் அருகில் அவன் குதிரை மீது வரும்வரை பொறுத்திருந்த பாண்டே, தன் வாளால் அவனை ஓங்கி வெட்டித் தரையில் சாய்த்தார்.
மற்றொரு அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை தூக்கி தோளில் அடிக்கட்டையைத் தாங்கிக் கொண்டு மங்கள் பாண்டேயைக் குறிபார்த்தான். இதை கவனித்த அணிவகுப்பில் நின்றிருந்த ஒரு இந்திய சிப்பாய் தனது துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டு அடிக்கட்டையால் அவன் தலையில் ஓங்கி அடிக்க, அவனும் மண்டை உடைந்து கீழே விழுந்து உயிரை விட்டான்.
இவ்வளவையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மேலதிகாரியான கர்னல் வீலர் என்பான் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிப்பாய்களை விட்டு மங்கள் பாண்டேயைக் கைது செய்ய உத்தரவிட்டான். பாண்டேயைக் கைது செய்ய அந்த சிப்பாய்கள் மைதானத்தின் மத்திய பகுதிக்கு ஓடிவந்தனர். அப்போது அணிவகுப்பில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். “
“மங்கள் பாண்டேயைத் தொடாதே! இந்த வீரன் மீது கைவைக்க அனுமதிக்க மாட்டோம். அவன் ரோமத்தைக் கூட உங்களால் தொடமுடியாது” என்று கலகம் செய்தனர்.
அணிவகுப்பு மைதானம் கலகலத்துப் போயிற்று. ரத்த வெள்ளத்தில் மைதானத்தின் நடுவே சில ஆங்கில அதிகாரிகள். அவர்களைக் கொல்ல காரணமாயிருந்த மங்கள் பாண்டே வெறி பிடித்தவர் போல கையில் துப்பாக்கியையும், வாளையும் வைத்துக் கொண்டு கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தார்.
அணிவகுத்த சிப்பாய்கள் வேறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக தாக்குதலுக்குத் தயாராக நிற்கின்றனர். இந்த காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போனார்கள் ஆங்கில அதிகாரிகள். கர்னல் வீலர் பயந்து தன் பங்களாவை நோக்கி ஓட ஆரம்பித்தான். அப்போது கைகள் ரத்தத்தால் கழுவப்பட்டு நிற்கின்ற மங்கள் பாண்டே கரங்களை உயர்த்தி, “சகோதரர்களே! செயல்படுங்கள்! நம்மை இழிவு செய்த பரங்கியருக்கு பாடம் கற்பிப்போம்” என்று உரக்கக் கத்தினார்.
மைதானத்தில் நடந்த செய்திகள் ஜெனரல் ஹியர்சே என்பாருக்குச் சென்றடைந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் தன் நம்பிக்கைக்குரிய ஆங்கில படை வீரர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அணிவகுப்பு மைதானத்தை நோக்கி ஓடிவந்தார்.
அப்படி வந்த ஆங்கில வீரர்களின் எண்ணிக்கையைக் கண்டும், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொண்ட மங்கள் பாண்டே, என்ன ஆனாலும் இந்த மிலேச்சர்கள் கையில் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் உயிர்த்தியாகம் செய்துகோள்வதே மேல் என்று நினைத்துத் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டார். காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த பாண்டேயை ஆங்கில வீரர்கள் தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்…
சிறையில் அடைக்கப்பட்டு வழக்கின் முடிவில் 1857 ஏப்ரல் 8ஆம் தேதி விடியற்காலை. சிறையிலிருந்து மங்கள் பாண்டேயை ஏராளமான சிப்பாய்கள் காவலோடு அழைத்து வந்தனர். ஒரு மாவீரனைப் போல மங்கள் பாண்டே தலை நிமிர்ந்து தூக்கு மேடை மீது ஏறினார். கூலிக்கு மாரடிக்க வந்த தூக்கிலிடுவோன் தன் பணியைச் செய்து முடித்தான். தூக்குக் கயிறு பாண்டேயின் கழுத்தை இறுக்கியது. இந்த தேசத்துக்காக முதல் வேட்டு வெடித்த மங்கள் பாண்டேயின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது…
மகாபாரதப் போருக்கு பலியிட ஒரு அரவான் கிடைத்தான். பாரத புண்ணிய பூமியின் முதல் சுதந்திரப் போருக்கு ஒரு “மங்கள் பாண்டே”கிடைத்தார்.
இந்திய மண்ணில் கோடானு கோடி பேர் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் மங்கள் பாண்டே போன்ற மாவீரனின் பெயர் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பதற்கு அவனது தேசபக்தியும், மகத்தான தியாகமுமே காரணம். தேசபக்தியின் விளைவாக நடந்தது இந்த நிகழ்ச்சிகள்.
வாழ்க மங்கள் பாண்டே புகழ்!
கட்டுரை: தஞ்சை வெ.கோபாலன்




