மருவு மறைய…
எருக்கம்பாலை தோலின் மீது படாமல் மருவின் மீது மாத்திரம் ஒரு வாரம் தடவி வர மருவு தானே சுருங்கி விழுந்து விடும்.
மலச்சிக்கலா?
பேரீச்சம்பழத்தை பாலில் வேகவைத்து இரவில் சாப்பிட மலச்சிக்கல் குணமாகி விடும்.
தரைப் பசலைக் கீரையை அவ்வப்பொழுது சமைத்துச் சாப்பிட மலச்சிக்கல் அடியோடு போகும். வெள்ளை, வெட்டை குணமாகும். சிறுநீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். போக இச்சையை உண்டுபண்ணும்.
நாள்தோறும் நாலைந்து வில்வ இலைகளை சாப்பிடலாம். அல்லது இரவு உணவுக்குப்பின் அம்மான் பச்சரிசி இலைக் கொழுந்து இரண்டை மென்று தின்ன பத்துப் பதினைந்து தினங்களில் மலச்சிக்கல் நீங்கும்.
எருமை வெண்ணெயும் வெல்லமும் கலந்து கண்டைக்காயளவு
உள்ளுக்குக் கொடுக்க ஒரு முறை பேதியாகும். சற்று நேரங்கழித்து
வெந்நீர் குடிக்கச் செய்தால் மற்றொரு முறை பேதியாகும். மலச்சிக்கல்
நீங்கிவிடும்.
நுணா மரத்தின் வேரை இடித்து கொதிக்கும் நீரில் போட்டுக் கஷாயம் வைத்து வடிகட்டி சாப்பிட இரண்டொரு முறை பேதியாகும்.
ரோஜாப்பூ இதழ்களை நிறைய சேகரித்து கற்கண்டு சேர்த்து இடித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கப் போகுமுன் ஒரு கோவி குண்டளவு சாப்பிட மலம் தாராளமாகப் போகும்.
நிழலில் உலர்த்திய மந்தாரைப் பூவை இடித்துத் தூளாக்கி தினமும் சிட்டிகையளவு எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட மலமிளகும். உடல் வெப்பம் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
மாரடைப்பு ஏற்படாமலிருக்க…
மாரடைப்பு – இருதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். கடலைப் பருப்பையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். பாலில் ஒரு திரி பூண்டைப் போட்டுக் காய்ச்சிப் பருகி வரலாம்.
மார்பு வலிக்கு…
வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகி விட்டால் அடிக்கடி மார்பில் வலி ஏற்படும். இதைப் போக்க இஞ்சியும் எலுமிச்சையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
செம்பருத்திப் பூக்களை சுத்தம் செய்து சுண்டக் கஷாயம் வைத்து பாலும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வர மார்பில் வலி வராது. இருந்த வலியும் நின்று போகும்.
குப்பைமேனி இலையை உலர்த்தி, இடித்து, மெல்லிய துணியில் சலித்துக் கொண்டு சமமாக சர்க்கரை சேர்த்து 200 மி.லி. பசும் பாலில் கலந்து காலையில் மட்டும் 15 நாள்கள் சாப்பிட்டு வர மார்பு வலி நீங்கி தேகத்திற்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்; சரீர வனப்பும் உண்டாகும்.
பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்துகிறது.
மார்புச் சளி கரைய…
சிறிது ஏலத்தைப் பொடி செய்து அதை நெய்யில் குழப்பி காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச் சளி தானே கரைந்து விடும்.
அடிக்கடி சளி பிடித்து தொந்தரவு கொடுத்தால் பசும்பாலில் சிறிது ஓமத்தைப் போட்டுக் காய்ச்சி சாப்பிட சளி கரைந்து குணம் தெரியும். துளசி இலையுடன் சிறிது மிளகை இடித்துச் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது தேன் கலந்து சாப்பிட சளித்தொல்லை போய்விடும்.
அகத்திக்கீரை. அகத்திப் பூ இரண்டையும் இடித்து சாறெடுத்து அதில் தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட சளி வறண்டு விடுவதுடன் தும்மலும் நின்று விடும்.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர சளித் தொல்லை தீரும். பச்சை சுண்டைக்காய் கிடைக்காவிட்டால் சுண்டைக்காய் வற்றலை பயன்படுத்தலாம்.
அடிக்கடி தேன் கலந்து வெந்நீர் பருக சளி கரையும். கோழை வற்றும். அடிக்கடி கபம் கட்டிக் கொண்டு இருமல் ஏற்பட்டால் பவழமல்லி மரத்தின் வேர்ப்பட்டையை நறுக்கி இலேசாக உலர்த்தி வெற்றிலை பாக்குடன் இரண்டொரு துணுக்குகளைச் சேர்த்து மென்று சாப்பிட குணம் தெரியும்.
வேளைப் பூவை புட்டுப்போல் அவித்து பத்து சொட்டு சாறு எடுத்து கோரோசனை அல்லது கஸ்தூரி மாத்திரை உரைத்துக் கொடுக்க மார்புச் சளி நீங்கும். மாந்தம் குணமாகும்.