மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உள்ள உரான் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஆலையில் கச்சா எண்ணெய் கழிவுகள் சேமித்து வைக்கும் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பகுதி என்பதால் தீ, அங்கிருந்து வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து தீ பரவாமல் தடுக்க, எரிவாயு எடுத்துச் செல்லப்படும் குழாய்கள் வேகமாக மூடப்பட்டன.
உடனடியாக ஆலையிலிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த, தீயணைப்பு துறையினர் 8 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினரும் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக ஓஎன்ஜிசி தரப்பில் கூறுகையில்; உரான் எண்ணெய் மற்றும் எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, எங்கள் தீயணைப்பு சேவைகள் குழு துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் எண்ணெய் வெளியேறும் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
ONGC: A fire broke out in storm water drainage, today morning in Uran oil & gas processing plant. ONGC fire services & crisis management team immediately pressed into action. Fire is being contained. No impact on Oil processing. Gas diverted to Hazira Plant. #Maharashtra https://t.co/co3OoHhOjP
— ANI (@ANI) September 3, 2019