விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தபோது தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து அபிநந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. டீ குடித்தவாறே பாகிஸ்தான் ராணுவத்தினர் எழுப்பும் கேள்விகளுக்கு, அபிநந்தன் பதிலளிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது.
வீடியோவில் முதலில் அவர் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் எனக் கேட்க, அதற்கு “ஆம், இங்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள்.
என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்திவருகிறார்கள்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் பகிரப்பட்டது. அதேநேரம் பாகிஸ்தான் இதை வைத்து கிண்டல் வீடியோக்களையும் வெளியிட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு இந்திய ராணுவம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 21-ம் தேதி காஷ்மீர் எல்லை வழியாக இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அவர்களைப் பிடித்த இந்திய ராணுவம் விசாரணை நடத்தியது.
ராவில்பிண்டியைச் சேர்ந்த முகமது கலீல் மற்றும் முகமது நஜிம் ஆகிய இந்த இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் பயிற்சி பெற்றதும் காஷ்மீரில் தீவிரவாத செயல்களைச் செய்ய வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்குப் பிறகு அவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தது இந்திய ராணுவம். அதில் தனது பழைய பகையை தீர்க்கும்வகையில் அந்தச் சம்பவம் இருந்தது. அபிநந்தன் டீ குடித்துக்கொண்டு வீடியோவில் பேசியதுபோல் தீவிரவாதிகளையும் டீ கப்புடன் பேச வைத்திருந்தனர் இந்திய ராணுவத்தினர்.
வீடியோ தொடங்கும்போது தீவிரவாதி நஜிம் டீயை குடித்துக்கொள்கிறார். தான் யார் என்ற விவரங்களை பேசியபின் கடைசியில் மீண்டும் டீ குடிக்கிறார். அப்போது டீ எப்படி இருக்கிறது' என்று இந்திய ராணுவத்தினர் கேட்க, அதற்கு
டீ நன்றாக இருக்கிறது (சாய் அச்சா ஹே)’ என்று இந்தியில் பதிலளிக்கிறார். பழிவாங்கும் வகையிலேயே இந்த வீடியோ எடுத்தோம் என `தி டெலிகிராப்’ நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இதே வீடியோவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் பயிற்சி பெற்றதும், காஷ்மீரில் தீவிரவாத செயல்களைச் செய்ய பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இருவரும் வாக்குமூலம் அளிக்கின்றனர்.
#WATCH SRINAGAR: Indian Army releases confession video of two Pakistani nationals, who are associated with Lashkar-e-Taiba, and were apprehended on August 21. #JammuAndKashmir pic.twitter.com/J57U3uPZBl
— ANI (@ANI) September 4, 2019