புது தில்லி: ஏர் இந்தியா விமானத்தை கடத்த பயங்கரவாதிகள் 6 பேர் சதி செய்ததாகவும், அவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும், விமான பணிப்பெண்களின் முயற்சியால் அவர்களின் சதி முறியடிக்கப்பட்டது என்றும் ஒரு விமானி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தத் தகவலை விமானப் போக்குவரத்துத் துறை செயலர் மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் 10 நாட்களுக்கு முன் நடந்ததாகவும், ஆனால் இப்போதுதான் அது வெளியில் தெரிந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இப்படி ஒரு சம்பவம் குறித்து எதுவுமே எங்களிடம் ரிப்போர்ட் ஆகவில்லை, இது ஒரு தவறான தகவல் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை செயலாளர் சோமசுந்தரம் கூறியுள்ளார். இது குறித்து முன்னர் வெளியான செய்தியில் அண்மையில் தில்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடுவானில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவன விமானம் ஒன்று அண்மையில், தில்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இதனால், அந்த பயணிக்கு விமானப் பணிப் பெண்கள் அவசர உதவிகளைச் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்து, தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டனர். பின்னர் உடல்நலக்குறைவு என்று கூறிய பயணியைச் சோதித்தனர். பின்னர் அந்த 5 பேரும் விமானியை வரச் சொல்லுங்கள் அல்லது தலைமை விமானி அறைக்குள் அனுமதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் அந்த 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். அதேபோல் வெகுநேரம் வற்புறுத்தியும் அவர்களை காக்பிட் அறைக்குள் அனுமதிக்கவில்லை, தலைமை விமானியும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசர அவசரமாக வெளியேறிச் சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த 5 பேர் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாஸ்போர்ட் வைத்திருந்தனர் என்றும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது. அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப்பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச் சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி செயல்பட்டு அவர்கள் விமானத்தை கடத்தி நாசகர செயலில் ஈடுபட முயன்று இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துதுறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் விமான காக்பிட் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.- என்று கூறப்பட்டிருந்தது. இதனால், இந்த முயற்சி இந்திய விமானத்தைக் கடத்த நடந்த சதிச்செயலா என்று பெரும் சந்தேகம் எழுந்தது. இது குறித்து முழு அளவில் விசாரிக்கப்படும் என்றும் இது போன்று எதுவும் தங்களுக்கு ரிப்போர்ட் ஆகவில்லை என்றும் விமான போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானக் கடத்தல் முயற்சி உண்மையில்லை: மறுக்கிறது விமானப் போக்குவரத்துத் துறை
Popular Categories


