புது தில்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் மலேசியா சென்றிருந்தார். அப்போது அவருக்கு கூரியர் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து வாழும் கலை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அனுப்பிய தகவல்: கொலை மிரட்டல் கடிதம் சில நாட்களுக்கு முன்பு மலேசிய பயணத்தின்போது வந்தது. அந்த நேரம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கம்போடியாவில் இருந்தார். கொலை மிரட்டல் பற்றி உடனே இந்திய தூதரகம் உள்பட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் என்று கூறி 3 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. நீங்கள் உங்களின் வாழும் கலை அமைப்பைத் தொடர்ந்து நடத்தினால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக் சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வன்முறையை கைவிடுமாறு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை கேட்டுக் கொண்டார். மலேசியா பினாங்கில் உள்ள ஹோட்டல் ஜென்னின் மேலாளர் கெவின் வெய்ட் ஹெட்டுக்கு ஒரு கடிதமும், மலேசியாவில் உள்ள வாழும் கலை அமைப்பின் இயக்குனர் அம்பிகா மேனனுக்கு ஒரு கடிதமும், வாழும் கலை அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ் இ மெய்க்கு ஒரு கடிதமும் வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியா பினாங்கில் பத்தாயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் ரவிசங்கர் கலந்து கொண்டார். பின்னர் மாலை நேரத்தில் பட்டு கவான் மைதானத்தில் 70ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசினார்.
வாழும்கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்
Popular Categories


