6 வயது குழந்தை, கர்ப்பிணி மனைவி, ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ்.,ஆதரவாளர் என மூவரை ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான சம்பவத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் தங்கள் வீட்டில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
காலை 11 மணி அளவில் பந்து பிரகாஷ் பால் (35), அவரது மனைவி பியூட்டி மொண்டல் பால் (30) மற்றும் அவர்களது ஆறு வயது மகன் அங்கன் பந்து பால் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். பியூட்டி மொண்டல் பால், எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். மிருகத்தனமான இந்தக் கொலை, அந்தப் பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பந்து பிரகாஷ், கோசைக்ராம் சஹாபாரா தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த பள்ளி ஆசிரியர். மேலும், அப்பகுதியில் காப்பீட்டு முகவராகவும் இருந்துள்ளார்.
பாலின் வீட்டிலிருந்து அதிக அளவில் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். “அவர்களின் வீட்டில் இருந்து உரத்த அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் அங்கு விரைந்தபோது, சிலர் வீட்டை விட்டு வெளியே ஓடுவதைக் கண்டோம், ”என்று ஒரு பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் பந்து பிரகாஷ் மற்றும் அவரது மகன் அங்கன் ஆகியோரின் உடலை ஒரே அறையில் தரையில் கண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பியூட்டியின் உடல், மற்றொரு அறையில் கிடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் போது உள்ளூர் சந்தையில் இருந்து பந்து பிரகாஷ் அப்போதுதான் திரும்பியதாக போலீஸார் கூறியுள்ளனர்.
அவர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் அவற்றை அங்கே கண்டு எடுத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த கொலைக்கு பின் உள்ள வெளிப்படையான நோக்கம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை; இந்தப் படுகொலை சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது! ஜியாகஞ்ச் காவல் நிலைய அதிகாரிகள், பாலின் இல்லத்திலிருந்து கொலையாளிகள் வெளியே ஓடிவருவதைக் கண்டு தெரிவித்த அக்கம் பக்கத்தினரிடம் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் படுகொலை சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் என்பதும், பாஜக., ஆதரவாளர் என்பதும் விசாரணையை மேலும் முடுக்கி விட்டுள்ளது. இருப்பினும், இந்தக் கொலை சொத்துக்காக நடத்தப் பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.