திருவனந்தபுரம்:
ஒருதலைக் காதலில் கல்லூரிக்குள் புகுந்து, மருத்துவ மாணவியை தீவைத்து எரித்த, முன்னாள் மாணவர் தானும் தீயில் கருகி மாண்டார்.
கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி (21) என்பவர் 3ஆவது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே உள்ள நீண்டகரையைச் சேர்ந்த ஆதர்ஷ் (25), இதே கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் அந்தக் கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார்.
அவரது கடைக்கு மாணவி லட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லட்சுமி மறுத்து விட்டார். அவரிடம் நட்புடனேயே பழகியதாக லட்சுமி கூறியுள்ளார். ஆனாலும் ஆதர்ஷ் தனது காதலை கைவிடாமல், தன்னைக் காதலிக்கும் படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இதனால் அவரது கடைக்குச் செல்வதை லட்சுமி தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதர்ஷ், நேற்று பகல் கல்லூரி உணவு இடைவேளையின் போது கல்லூரிக்குள் நுழைந்தார். லட்சுமி படிக்கும் வகுப்பறைக்குள் சென்ற அவர் தன்னைக் காதலிக்கும் படி லட்சுமியிடம் மிரட்டியுள்ளார். ஆனால் அவரைக் கண்டித்த அவர், ஆதர்ஷை வகுப்பறையை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆதர்ஷ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை மாணவி லட்சுமியின் மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு அவர் லட்சுமியை கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் இருவரின் உடலிலும் தீ பரவியதால் அவர்கள் அலறினர். தங்கள் கண் முன் நடந்த இந்தக் கொடூரச் செயலைப் பார்த்த மாணவ- மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற முயன்ற சில மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே இருவரும் கருகி பிணமாகச் சாய்ந்தனர். கல்லூரி வகுப்பறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது.