கார்த்திகை சோமவாரத்தில் பக்தர்கள் ஏற்றிய தீபங்களை அணைத்த ஆலய ஊழியர் . ஒய்சிபி எம்எல்ஏ ஆத்திரம். ஊழியரின் வேலைக்கு வைத்தார் வேட்டு.
கோவிலில் பக்தர்கள் ஏற்றிய கார்த்திகை தீபங்களை அணைத்தார் ஆலய ஊழியர். பக்தர்கள் தடுத்தும் கேட்காமல் நீர் ஊற்றி அணைத்த கொடுமை. சோசியல் மீடியாவில் வைரலான வீடியோவால் மாட்டிக் கொண்டார்.
சம்பவம் குறித்து ரொம்பவே சீரியஸாக எதிர்வினை ஆற்றிய கோவூரு எம்எல்ஏ ‘நல்லபுரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி’ கோவில் ஊழியரை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புண்ணியத்தலம் ‘ஜொன்னவாடா’ காமாட்சி அம்மன் கோவில்! இங்கே நடந்த இந்தச் சம்பவம் பற்றி கோவூரு எம்எல்ஏ ஆத்திரமடைந்தார். ஆலய செயல் அதிகாரி என்ன செய்கிறார் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கார்த்திகை மாதம் பக்தர்கள் பெருமளவில் கோவிலுக்கு வந்து விளக்கு ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு வருத்தமளிக்கிறது என்றார்.
ஊழியர் மது அருந்தி விட்டு பைப்பை போட்டு குழாயிலிருந்து நீர் பாய்ச்சி பக்தர்கள் ஏற்றிய விளக்குகளை அணைக்கும்போது அதிகாரிகள் கண்காணிக்காமல் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுமக்கள் எதிரில் பதில் சொல்ல வேண்டியுள்ளது. இது சின்ன விஷயம் அல்ல. மக்களின் பக்தி, நம்பிக்கை தொடர்பானது என்று கூறினார்.
இதுகுறித்து மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளோடு எம்எல்ஏ உரையாடினார். ஜொன்னவாடா ஆலயத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
நெல்லூர் மாவட்டம் ‘புச்சிநாயுடு கண்ட்ரங்கி’ மண்டலம் ஜொன்னவாடாவில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்து தரிசித்துச் செல்வது வழக்கம் . அதிலும் கார்த்திகை மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தன்று இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது. ஆலய ஊழியரின் இந்த செயலை பக்தர்கள் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்ததால் அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.