கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக, பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டது.
பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இதனை அறிவித்துள்ளார். மேலும், கோட்சே குறித்த பிரக்யா தாக்குரின் சர்ச்சைப் பேச்சுக்கு ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில் கோட்சே ஒரு தேச பக்தர் என சாத்வி பிரக்யா தாக்குர் பேசியது பெரும் சர்ச்சை யாக உருவெடுத்தது.
இதனிடையே, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றே பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் கருதுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் விமர்சனம் செய்தார்.
சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, காந்தி ஒருதலைப்பட்சமான கொள்கையை கொண்டவர் என்பதால் 32 ஆண்டுகளாக அவர் மீது வஞ்சம் கொண்டிருந்ததாகவும், அதனால் காந்தியை கொலை செய்ததாகவும் கோட்சே தெரிவித்தார் என்றார் ஆ.ராசா!
அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்குர், இந்த விவகாரத்தில் ஒரு தேசபக்தரை குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனத் தெரிவித்தார்.
பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரக்யாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா சமாதானம் செய்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார்! இதை அவர்கள் மறைக்க முடியாது! பிரக்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.
இந்நிலையில், தம் கொள்கையில் உறுதியாக இருந்து, ஒரு தேசபக்தரை பிரிவினைவாதிகளின் ஊதுகுழலாக செயல்படும் திமுக.,வின் ஆண்டிமுத்து ராசா இழிவாகப் பேசியபோது, இயல்பாக எழுந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் மறுத்துப் பேசிய பிரக்யா தாக்குரை பாதுகாப்புக் குழுவில் இருந்து நீக்கம்செய்து பாஜக., நிலை தடுமாறியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதில் இருந்து, பாஜக., முஸ்லிம்களை தாஜா செய்யும் கொள்கைகளுடன் இன்னொரு காங்கிரஸ் ஆகிவிட்டதாகவும் ஹிந்துக்களின் நலன் கருதி எதையும் செய்யவில்லை என்றும் தங்கள் உள்ளக் குமுறலை ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு மேலும் தூபம் போடுவது போல், பிரக்யா தாக்குர் விவகாரத்தில் பாஜக., தேசியத் தலைவர் ஜேபி நட்டா எடுத்துள்ள இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
இதனிடையே, உதம் சிங் குறித்து பேசியதை கோட்சேக்கு ஆதரவாக பேசினார் என திரிக்கப்படுகிறதா? என்று பாஜக.,வினர் சிலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அப்படி என்றால், ஏன் ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப் படுகிறது.