சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பை வேகப்படுத்திய தவே!

Published:

புது தில்லி: அதிமுக பொதுச்செயலாளர் ஆன கையுடன், தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள வி.கே.சசிகலா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்த வாரமே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு விரைந்திடக் காரணமாக இருந்தவர் கர்நாடக தரப்பு, சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே.

தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 1996ம் ஆண்டில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஜெயலலிதா உட்பட நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். இதன் பின்னர், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கப் போகும் முடிவுக்கு வர, கர்நாடக அரசுத் தரப்பின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேயின் கோரிக்கை ஒரு முக்கியமான காரணமாகும். சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு தரப்புக்காக மூத்த வழக்கறிஞரான ஆச்சாரியாவுடன் இணைந்து வாதிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே என்பது குறிப்பிடத் தக்கது.

உச்ச நீதிமன்ற பெஞ்ச்சை இன்று அணுகினார் தவே. “சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தீர்ப்பு குறித்து நினைவு படுத்த விரும்புகிறேன்” என்று தவே நீதிபதிகள் பெஞ்சிடம் தெரிவித்தார். இவரது நினைவூட்டலுக்கு பிறகே, இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்த வாரத்தில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், தவே கொடுத்த கோரிக்கையும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவலும், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Related articles

Recent articles

spot_img