
நிலத்தடி மண்ணின் ஆரோக்கியமே உலகின் உணவு பாதுகாப்புக்கு அடித்தளம். பூமியின் சாரத்தை பாதுகாப்பதன் அவசியத்தை இந்த நாள் நினைவு படுத்துகிறது.
இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் பூமித்தாய் வளம் பெறுகிறாள். நிலத்தின் மண்வளத்தை ஆராய்ந்து அதற்கேற்ப எரு பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் முக்கியத்துவம்.

அனைத்து உயிர்களின் வளர்ச்சிக்கும் பூமியில் உள்ள மண்ணே ஆதாரம். ஒரு காலத்தில் பயிர்கள் இயற்கை உரம் போட்டு வளர்க்கப்பட்டன. தற்போது ரசாயன எரு உபயோகம் அதிகமாகிவிட்டதால் பூமியின் சாரம் குறைந்து வருகிறது.
பூச்சி மருந்துகளும் ரசாயன உரங்களும் கணக்கின்றி பயன்படுத்தப்படுவதால் மண் வளமும் மனித ஆரோக்கியமும் ஒருசேர கெடுகின்றன.

அனைத்து உயிர்களுக்கும் காற்று நீர் உணவு மூன்றும் ஜீவாதாரமானவை. நிலவளம் நன்றாக இருந்தால்தான் கைப்பிடி அளவு கவளமாவது மனிதனுக்கு பசியாறக் கிடைக்கும்.
நம்நாடு விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டது. அதனால் இந்த நாள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

அதோடு ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவு மண் அரித்துச் செல்லப்படுகிறது. பூமியின் மீது மக்கள் தொகை பெருகுமளவு விவசாய நிலத்தில் மண் அரிப்பும் பாதிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டிற்கான உலக மண்நல தினத்திற்கான முழக்கம் “மண்ணரிப்பைத் தடுப்போம்! எதிர்காலத்தை காப்போம்!” என்பது.


