
மரக்காணம் அருகே சூலைமேடு பகுதியை அடுத்த தாங்கல் தோட்டக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது39). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை.
மணிகண்டன் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவா் என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை திப்புராயப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் உள்ள சாமியாரை சந்தித்து குறிகேட்டுள்ளார்.
அப்போது உங்கள் வீட்டுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் திருமணம் கைகூடவில்லை என்று அந்த சாமியார் கூறினார்.
மேலும் பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக சாமியார் கூறினார். இதனைகேட்டு மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார்.
சாமியார் கூறியது முதல் மணிகண்டன் வேலைக்கு செல்லாமலும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமலும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது ஜோதிடம் பலித்துள்ளது வீட்டுக்கு நேரம் சரியில்லாமல் இருந்ததால்தான் இளைஞர் மணிகண்டன் உயிர் பறிபோய் உள்ளது. என தெரிவித்தனா்.


