மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஹிங்காங்கட் எனும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல காலையில் கல்லூரிக்குச் சென்றபோது இவரை, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி நாக்ரலே என்பவர் கொலை செய்ய முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், தனியார் கல்லூரியில் ஏழு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். இவர், தன்னுடைய கிராமத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம்.
நேற்று காலை நாக்ரலே, இவரை தன்னுடைய பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பேருந்திலிருந்து இறங்கி கல்லூரிக்குச் செல்வதற்கான இடைவேளையில் நாக்ரலே, அவர்மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அந்த இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய காவல்துறை ஆய்வாளர் சத்யவீர் பாண்டிவார், “இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே நாக்ரலே கைது செய்யப்பட்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே இருவரும் நெருங்கிப் பழகியுள்ளதாக நாக்ரலே கூறுகிறார்.
இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாக்ரலேவின் முறையற்ற நடவடிக்கைகளால் அவருடனான நட்பை பாதிக்கப்பட்ட இளம்பெண் துண்டித்துள்ளார். கடந்த ஆண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார். ஆனால், நாக்ரலே தொடர்ந்து இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ள நிலையில், இந்தச் செயலைச் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
நாக்ரலேவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவர், “உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. சுவாச மண்டலம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
சிறப்பு மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளார். தொடர்ந்து உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவர் உயிர் பிழைத்தாலும் பார்வை பறிபோகும் நிலை உள்ளது” என்று கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “வர்தா மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளரிடம், இதுதொடர்பான விசாரணைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.