
மீண்டும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் பெயர் சூடான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. புதிதாக வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜக.,வில் சேர்ந்ததன் தொடர்பில், மறுபடியும் வீரப்பனின் பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் ஓர் வித்தியாசம்… முன்பெல்லாம் வீரப்பன் என்றும், போராளி என்றும் எழுதிவந்த ஊடகங்கள், இப்போது சந்தனக் கடத்தல் மன்னன் என்று வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதுதான்!
கிருஷ்ணகிரியில் நடந்த பாஜக., கட்சி நிகழ்ச்சியில் கட்சியின் செயலர் முரளிதர ராவு, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சனிக்கிழமையன்று வீரப்பன் மகள் வித்யா ராணி பாஜக.,வில் இணைந்தார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களும் அரசாட்சியும் மிகவும் பிடித்திருப்பதால் பிஜேபியில் சேர்ந்ததாக குறிப்பிட்டார். அவருடன் சுமார் 1000 பேர் ஆதரவாளர்கள் பிஜேபியில் சேர்ந்ததாகவும் வித்யாராணி தெளிவாகச் சொன்னார்.
கடந்த காலத்தில் வீரப்பன் மீது மக்களிடம் இருந்த அனுதாப அலையால் 2006-ல் அரசியலுக்கு வந்தார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார். இப்போது வீரப்பனின் மகள் அரசியலில் புகுந்துள்ளது மீண்டும் ஒருமுறை பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் பிஜேபி கட்சியில் சேர்ந்த செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரப்பன் மகள் பாஜக.,வில் சேர்ந்த விவகாரத்தை சமூகத் தளங்களில் பாஜக., ஆதரவாளர்களே விமர்சித்தனர். பாஜக.,வில் இப்படிப்பட்ட நபர்களையும் இணைப்பார்களா என்ற அளவில் அவர்களின் கருத்துகள் இருந்தன. அதற்கு ஏற்ப, இப்போது ஊடகங்களிலும் அந்த மரியாதை எதிரொலிக்கிறது.


