ரஜினியிடம் என்ன இருக்கிறது; அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.
ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்க, மார்கண்டேய கட்ஜுவோ, தனது பேஸ்புக் பக்கத்தில், வேறுவிதமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் ஒன்றும் இல்லை கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூலில் பதிவு செய்த கருத்துகள்:
தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான குருட்டு பக்தியை மக்கள் வைத்திருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
1967-68களில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருமுறை எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து ‘சிவாஜி கணேசன்’ நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூட சிலர் கூறுகின்றனர். அப்படி ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?
வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வுகள் வைத்துள்ளாரா? அவரிடம் ஒன்றுமே இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.” என்று கட்ஜு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவரது முதல் நாள் பேச்சைக் கொண்டே, அவர் அரசியல் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, தினமும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்து தெரிவித்துள்ளார்.