லே, லடாக் பகுதிகளில் பணிபுரியும் 34 வயதான இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்த ராணுவ வீரர் இந்திய ராணுவத்தின் லடாக் ஸ்கவுட்ஸ் படையைச் சேர்ந்தவர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் விடுமுறையில் இருந்தார். அப்போது அவரது தந்தை ஈரானுக்குச் சென்று விட்டு பிப்.27 அன்று நாடு திருமினார். தந்தையை பார்க்க ஊருக்குச் சென்ற அந்த வீரர், அவரைப் பார்த்துவிட்டு மார்ச் 2 ஆம் தேதி பணிக்குத் திரும்பினார்.
கடந்த பிப்.29 ஆம் தேதி அன்று அவரது தந்தைக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. பரிசோதனையில் மார்ச் 6 அன்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர் தனி வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அந்த ராணுவ வீரருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் சகோதரி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது.
அசாமில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்தவருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும், தொடர் காச்சலால் பாதிக்கப்பட்டதால் அவர் தூத்துக்குடி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் வந்த பின்னரே கொரோனா பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.