கொரோனா வைரஸ் தொற்றுக்கு பெண்களின் தவறுதான் காரணம் என்று பாகிஸ்தான் இசுலாமிய மதகுரு மௌலானா தாரிக் ஜமீல் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் அரைகுறை உடையணியும் பெண்கள் தான் காரணம் என்றார் ஜமீல். அதே போல் பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்றும் கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக அவர் ஊடகங்கள் குறித்து பேசியது ஊடகங்களில் பெரும் சர்ச்சையானது. இதை அடுத்து ஊடகம் தொடர்பான பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் பெண்கள் பற்றிய அவதூறான கருத்துக்கு மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை.
மௌலானா தாரிக் ஜமீலின் பெண்கள் குறித்தான கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்களின் நடத்தையை தொற்றுநோய் உடன் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மவுலானா தாரிக் ஜமீல் பாகிஸ்தானின் முன்னணி மத போதகர்களில் ஒருவர். அவரது பிரசங்கங்கள் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன, அவருக்கு யூடியூப் சேனலில் 35 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
தப்லிக் இ ஜமாஅத் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார் ஜமீல். பாகிஸ்தானில் தொற்றுநோயை விதைத்ததாக தப்ளிக் இ ஜமாஅத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது! இவர் மார்ச் மாதத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட தப்ளிக் இ ஜமாஅத் கூட்டத்தை நடத்தினார். இதனால் கொரோனா வெகுவெகமாகப் பரவியது என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மவுலானா தாரிக் ஜமீல் ஒரு தொலைக்காட்சி நேரலை உரையாடலில் நாட்டில் பெண்களிடம் அடக்கமில்லை. நடனமாடுகிறார்கள். குறைந்த ஆடைகளை அணிகிறார்கள். பெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனித குலத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றார். மேலும், பிரதமர் இம்ரான்கான் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நிதி திரட்டும் நிகழ்வின் போது இந்த தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதேநெரம், இது சர்ச்சையானதால், ஊடகங்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். ஆயினும் பெண்களைப் பற்றிய அவதூறான கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கவில்லை.
இந்நிலையில் இவரது செயலுக்கு பலவேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி பெண்கள் குறைந்த ஆடை அணிந்ததன் விளைவாக தொற்றுநோய் உருவாகியதாக யாரோ ஒருவர் கூறுவது “அபத்தமானது”. அறியாமையான கருத்து, தொற்றுநோய் குறித்த தவறான கருத்து, அவரது மனநிலையை பிரதிபலிக்கிறது என்றார்.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையமும், ஒரு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் கூறப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் தவறான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறது என்று எச்சரித்துள்ளது